நடுத்தர வயதடைந்து விட்டதால், என்ன நாள் / பண்டிகை என்றாலுமே, பல நினைவுகளை அது கிளருகிறது. அப்படி எனக்கு இந்த தீபாவளி பல பழைய நினைவுகளை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறது.
என்னுடைய பால்யம்(மும்) ஏழ்மையிலேயே கழிந்திருக்கிறது. எனக்கு இரண்டும் அண்ணா என்பதால், நான்தான் வீட்டில் செல்லம் என்பது சொல்லத் தேவையில்லை. என் அப்பாவும், பெரும்பான்மையான (மகளைப் பெற்ற) அப்பாவைப்போல் தங்கமீன் அப்பாதான்.
என் அண்ணனுடன், என் மாமாவின் நண்பரின் பட்டாசு கடைக்கு, தீபாவளியின் முன் தினம் இரவு போய், ஓசி பட்டாசு வாங்கி வருவது - தொலைகாட்சி மோகம் இல்லாத அக்காலங்களில், எங்களின் பெரிய கசின் கூட்டத்தோடு ராகவேந்திர மடத்திற்கு சென்று, தீபாவளி அன்று அங்கு தரும் எண்ணையை தலையில் தேய்த்து கொள்வது - அண்ணன்கள் விடும் பட்டாசை பார்ப்பது (எனக்கு பயம் இப்போதும்) - அம்மாவோடு தீபாவளி அன்று மதியம் என் மாமா வீட்டிற்கு சென்று, பாட்டியை நமஸ்கரித்து விட்டு, மாமா மகள்களுடன் விளையாடுவது - இன்னும் சில நினைவுகள் இருந்தாலும் என்றுமே மறவாத தீபாவளியாக ஒன்றை அமைத்துவிட்டது விதி.
எவ்வருடமுமே இல்லாத திருவருடமாக, தீபாவளிக்கு எனக்கு பாவாடை சட்டை, அதுவும் ரெண்டு மாதத்திற்கு முன்னமேயே வாங்க அப்பா-அம்மாவுடன் கடைக்கு சென்றாகிவிட்டது. பட்டு இல்லை என்றாலும், பார்டர் போட்ட, ஜரிகை வைத்த பளப்பள பாவடைகளில் நான் அடம் பிடித்து வாங்கியது 'கருப்பு நிறத்தில் அரக்கு கலர் பார்டர்' போட்ட பாவாடைத்துணி. அம்மாவிற்கு பண்டிகைன்னு வாங்குவது கருப்பாக இருப்பதில் விருப்பமில்லை. ஆனால் அப்பாதான் 'தங்கமீன்' வகை ஆயிற்றே! அதையே வாங்கிக் கொடுத்து விட்டார்.
அந்த வருடம்தான் சிறிது பணம் புழங்கியது போலும் அப்பா கைகளில், பட்டாசு கூட 'வாங்கி'க் கொடுப்பதாய் கூறி இருந்தார். ஆனால் தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போது, ஒரு ஹார்ட் அட்டாக்கினால், இறந்தே விட்டார். :'(
வளர்ந்து, பல மூட நம்பிக்கைகளை, நான் தூக்கி எறிந்த போதும், பண்டிகைன்னா கருப்பு வாங்கக் கூடாதுங்கிறது மட்டும் இன்றும் கடைப் கடைபிடிக்கிறேன்.