கொட்டித் தீர்க்கும் கனத்த ரகம்
இல்லையென்றாலும்,
நாள் கணக்காய் தொடர்ந்து
ஒரே சீராகப் பெய்கிறது மழை.
விட்டு விட்டு மழை,
சீரான அதன் சாரல்;
பலத்த காற்று,
ஓயாத அதன் ஊதல்;
மேகங்களிலும் மூடுபனியிலும்
ஒளிந்து விளையாடும் மலைகள்;
உறைக்கும் குளிர்;
இவற்றைக் குழைத்து தருகிறது
பருவமழை.
ஆடிக் காற்றோடு
சோடி சேர்ந்து
குளிரைக் கூட்டுகிறது.
சமையலில் இருக்கும்போது
குளிர்வதில்லை;
வீட்டு வேலைகளின்போது
குளிர்வதில்லை;
எல்லாம் முடித்து அமர்கையில்
குளிர்கிறது.
சன்னல் பால்கனி கதவுகளை
மூடி வைத்தாலும்,
ஏதோ ஒரு இடைவெளியில்
உள் நுழைந்து,
ஊசி போல் குத்துகிறது.
என் தாய்
இயல்பாய் கடக்கிறாள்.
நான்தான்
குளிர்காயக் கிடக்கிறேன்.
சில்லென்று இருக்கிறது, போதும்
செல்லென்றேன்.
சட்டென்று மழையாய் பெய்து, எனைப்பார்த்து
கொல்லென்று சிரிக்கிறது.