November 2, 2025

I am a spam - Short story in Tamil



நான் தான் ஸ்பாம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், தலைமுறை ஈ -யை சேர்ந்தவன். ஸ்பாம்களின் இளைய தலைமுறை. செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவானவன் என்ற பெருமை எனக்குண்டு.

இணையம்தான் எங்கள் வாழ்வாதாரம். இணையம் இல்லை என்றால் நாங்கள் இல்லை, எங்களின் பரிணாம வளர்ச்சி இல்லை.

இணையத்தின் தொடக்கக் காலமான 90களில், இணைய கஃபேக்களில் உட்கார்ந்து கொண்டு போலி ஐடியைத் துவங்கி, அதிலிருந்து "ஏ எஸ் எல் ப்ளீஸ்" என்று ஒரே நேரத்தில் பலருடன் சாட் செய்து கடலை போட்ட சாதாரணர்கள்தான், எங்கள் முன்னோடிகள்.

நாங்களும் உங்களை போலவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பயிற்சி பள்ளிக்குச் செல்ல வேண்டும். அங்கு எங்கள் இனத்தின் பிறப்பு, வரலாறு, அசகாய வீரர்கள், நான்கு தலைமுறைகளாக எங்கள் பரிணாமம், எங்களின் சவால்கள், அதை உடைத்தெறியும் வழிகள் என்று அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்கள்.

சில உதாரணங்களை "கேஸ் ஸ்டடீஸ்" என்று விளக்குவார்கள். அப்படி ஒரு ஆய்வுதான் சமீபத்தில் கரூரில் நடந்த அசம்பாவிதம். எப்படி அனைத்து கட்சிகளும் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், அரசியல் செய்தார்களோ, அப்படிதான் நாங்களும், எந்த ஒரு சூழ்நிலையையும் தவற விடக் கூடாது என்று விளக்கினார்கள்.

90களின் “ஈமெயில் ஸ்பாம்” தான் எங்கள் இனத்தின் முதல் சூப்பர் ஸ்டார். எங்கள் மூதாதையர்களின் சாகசங்களை, பல தடைகளைத் தாண்டி அவர்கள் மனிதர்களுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இழைத்த சேதங்களை, வரலாற்று வகுப்பில் நாங்கள் படிக்கும் போது, எங்களுக்குள் உத்வேகம் எழும். இப்படி தலைமுறைகள் தாண்டியும் எங்கள் பெயர் நிற்கும் அளவிற்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்று நரம்புகள் புடைக்கும் எங்களுக்கு.

அப்போதைய மனிதர்களின் ஆர்வமும், வெகுளித்தனமும், பலவீனமான தொழில்நுட்பமும் கூட எங்களின் அப்போதைய அசுர வளர்ச்சிக்குக் காரணம் என்பதையும் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். 

மெலிசா மாதிரிதான் ஒவ்வொரு முறையும் மனிதனை நிலைகுலைக்கத் திட்டம் போடுவோம், ஆனால் மோந்தா அளவு சேதம் விளைவித்தாலே பெரிய விடயம் என்பது போலாகிவிட்டது எங்கள் நிலைமை. எங்கள் பக்கம் உங்கள் கவனம் திரும்புகிறதென்று உணர்ந்து, விஸ்வரூபம் எடுக்க ஆவலாய் தயாராய் இருப்போம். ஆனால் நீங்களோ "மார்க் ஆஸ் ஸ்பாம்" என்று எங்கள் மேல் முத்திரை குத்தி, இடது கையால் ஒதுக்குவீர்கள்.

"இரண்டு நாளில் உடல் எடை குறைப்பு", "நான் பக்கத்து நாட்டுப் பிரதமர், எனக்கு உதவுவீர்களா" போன்றவற்றிற்கு இப்போது யாரும் ஏமாறுவதில்லை. ஆனால் "உங்கள் வங்கிக் கணக்கில் 50000 டாலர்ஸ் கிரெடிட் செய்யப் பட்டு விட்டது" மற்றும் "அரிதான பார்ன் - தவற விடாதீர்கள்" என்பவற்றைத் திறந்து பார்ப்பவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் எங்களின் இப்போதைய ஒரே ஆறுதல்.

நாய் கடித்து, மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று கண்மூடித்தனமாக நாய்களுக்கு ஆதரவாகப் பல மனிதர்கள் இறங்கினார்கள். ஆனால் எங்களுக்கு அதுபோல பரிந்து பேச யாருமில்லை. அதனால் நானே எங்கள் கவலைகளைச் சொல்கிறேன்.

·       மக்கள் முன்புபோல கிளிக்-பெய்ட்' ற்கு ஏமாறுவதில்லை.

·         தொழில்நுட்ப வல்லுநர்கள் எங்கள் பெயரிலேயே ஃபோல்டர் உருவாக்கி, அதற்குள் நாங்களாகவே போகுமாறு செய்கிறார்கள்.

·         தேநீர் வடிகட்டி போல எங்களுக்கும் வடிகட்டிகள் பல இருக்கின்றன.

·         அடிக்கும் ஆரஞ்சு நிறத்திலும், சீறும் சிவப்பு நிறத்திலும், ஆபத்து சின்னம் போட்டு "இது உங்களுக்கு மிகவும் ஆபத்தைத் தரக் கூடியது" என்று மக்களை எச்சரிக்கிறார்கள்.

·         பல உயர்தர ஆன்டி வைரஸ் / ஸ்பாம் மென்பொருட்களும், அதன் அடுத்தடுத்த பதிப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

·         பல இடங்களில் எங்களால் நுழையவே முடியாத அளவிற்குப் பாதுகாப்பு அரண் பலமாக போடப் பட்டிருக்கிறது.

·         எங்களை தடுக்கவும், எங்கள் மீது புகாரளிக்கவும் ஏராள எளிமையான வசதிகள் ஒவ்வொரு பிளாட்ஃபார்மிலும் இருக்கிறது.

·         என்னை உருவாக்கிய நுண்ணறிவே, என்னை அழிக்கவும் பலருக்கு வழிகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இப்படி இப்போதைய இளைய தலைமுறையாகிய நாங்கள் உயிரோடிருக்க மற்றும் செழித்து வளர எங்கள் மூதாதையர்களை விடப் பலமடங்கு சிரமப் பட வேண்டியுள்ளது.

நீங்கள் எங்களுக்கு கருணை காட்டவில்லையென்றாலும் பரவாயில்லை. புதுப்புது மென்பொருட்களின் இரும்புக்கரம் கொண்டு எங்களை அழிக்கப் பார்த்தாலும் கவலையில்லை. உங்கள் வளர்ச்சிக்குச் சற்றும் குறைவில்லாமல் எங்கள் வளர்ச்சியும் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இணையம் இருக்கும்வரை நாங்களும் இருப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடைசியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.                           

அன்றைய யூஸ்நெட் காலம் முதல் இன்றைய இன்ஸ்டா காலம் வரை உங்களின் சக மனிதர்களை ஃபேக் ஐடிகளால் துன்புறுத்துகிறீர்கள். எங்களால் உங்களுக்குப் பொருட்செலவு / சேதம் மட்டும்தான். ஆனால் உங்களின் இந்த "ஃபேக் ஐடி" கலாச்சாரம் பலருக்கு மன உளைச்சலை தருகிறது. முகமூடியின் பின்னால் ஒளிந்துகொண்டு நீங்கள் காட்டும் வீரத்தைப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

பிரபலங்கள் பணமும் அந்தஸ்தும் இருப்பதால் தங்களைச் சமாளித்துக் கொள்கிறார்கள். இருந்தாலுமே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஃபேக் ஐடி கொடுக்கும் நெகட்டிவிட்டிக்கு மூக்கால் அழுகிறார்கள். இதில் உண்மையாகப் பாதிக்கப் படுவது சாதாரணர்கள்தான். அதுவும் பெண்கள் எனும் போது நீங்கள் வருந்துவதில்லையா?

சென்னையில் சென்ற வருடம் நடந்த சம்பவம். ஒரு அடுக்க மாடி குடியிருப்பில் மாடியிலிருந்து எப்படியோ தவறி விழ இருந்த ஒரு குழந்தையைப் பல பேர் முயன்று ஒரு காயமும் இல்லாமல் காப்பாற்றி விட்டார்கள். ஆனால் இந்த சமூகம் அந்த பெண்ணை சும்மாவா விட்டது. ஊர், பேர், அறிமுகம் இல்லாத அல்லாத அத்தனை பேரும் அந்த குழந்தையின் அம்மாவைப் பலவாறு திட்டி தீர்த்து விட்டார்கள். விளைவு? ஓரிரு மாதங்களில் அந்த தாய் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாள்.

அதே போல ஆந்திராவில் சென்ற வருடம் நடந்த சம்பவம். இலவச வீடு திட்டத்தில் ஒரு பெண்ணிற்கு வீடு கிடைத்ததற்காக, அவள் அந்த மாநில முதலமைச்சருக்கு நன்றி சொல்லி காணொளி வெளியிட்டாள். அது முகம் தெரியாத பலரால் ட்ரோல் செய்யப் படவே, அவள் தற்கொலை செய்து கொண்டாள்.     

இதற்குப் பயந்தே திறமையுடைய பல பெண்கள் அமைதியாகவே இருந்து விடுகிறார்கள்.     

இப்போது சொல்லுங்கள், நான் ஸ்பாமா அல்லது நீங்களா?

December 29, 2024

தவப்புதல்வி - My first published book


மகளின் பிறந்த நாளிற்கு மூன்று மாதங்கள் முன்பு, திடீரென்று தோன்றிய எண்ணத்தால், அவளைப் பற்றி, நான் ஏற்கனவே எழுதிய பல குறிப்பு / பதிவுகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி, பதிப்பித்து பிறந்த நாள் பரிசாக கொடுக்கலாம்  என்று தோன்றியது. உடனே களத்தில் இறங்கினேன். சனி, ஞாயிறு மட்டுமே நேரத்தை செலவிட முடியும் என்கிற சூழல். ஆனால் அப்படி  கிடைத்த நேரத்தில், பலமணி நேரம் தொடர்ந்து எழுதினேன். 60% content ஏற்கனவே இருந்தாலும், அதையும் திருத்த, மொழி பெயர்க்க, arrange செய்ய என்று பல எழுத வேண்டியிருந்தது. 40% புதிதாய் எழுதவும் வேண்டியிருந்தது. 

என் தோழி அலமேலு சென்னையிலிருந்து proofreading -இல் மிகுந்த உதவி செய்தாள். பல முறை பகுதி பகுதியாகவும், முழுமையாகவும் draft -ஐ அனுப்பியும், அவ்வப்போதே திருத்தி அனுப்பினாள். புத்தகத்தில் எழுதப்  பல யோசனைகளையும் கொடுத்தாள். புத்தகம் பிரிண்ட் -க்கு அனுப்பும் வரை பக்க பலமாக இருந்தாள். என் மற்றொரு தோழி, குடும்ப நண்பர், சித்தா டாக்டர் நிகிலா, நான் கேட்டதும், மிகுந்த நேரமின்மை சூழ்நிலையிலும், அணிந்துரை எழுதிக் கொடுத்தார். நான் புத்தகம் எழுதுவதைப் பற்றி மிகவும் மகிழ்ந்தார். 

எழுதுவது, திருத்துவது, அட்டைப் பட வடிவமைப்பு இப்படி busy -யாக இருந்ததால், இதை முடித்து printing process -ஐ explore செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அப்படி நான் செய்திருந்தால் நேரம் இல்லாமல் போயிருக்கும். மகளின் பிறந்த நாளின் போது, புத்தகம் கையில் கிடைத்திருக்குமா என்று தெரியாது. என் அண்ணன், ஆன்மிக எழுத்தாளர் - மொழிப் பெயர்ப்பாளர் பிரசாத், அவர் வழக்கமாகப் பதிப்பிக்கும் பதிப்பகத்தை அறிமுகம் செய்ததால், உடனே வேலை நடந்தது.     

Self publishing என்று கூட சொல்ல முடியாது. Self printing என்றுதான் சொல்ல வேண்டும். முன்பக்க, பின்பக்க அட்டைகளை நானே Canva -வில் design செய்தேன். பின்பக்க அட்டையில் என் புகைப்படம் (எழுத்தாளர் -ன்னா சும்மாவா!), புத்தகத்தைப் பற்றிய சிறு synopsis, அணிந்துரை, எனது நன்றி என்று ஒரு proper எழுத்தாளரின் புத்தகத்தைப் போல பதிப்பித்தேன். விற்பனைக்காக அல்ல. ஜஸ்ட் ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதியது இது. மொத்தமாகவே 20 புத்தகங்கள்தான் பதிப்பித்தேன்.

"தவப்புதல்வி" என்ற தலைப்பு, என் கணவரின் பரிந்துரை. எனது விருப்பத்தில் இருந்த மற்ற புத்தக தலைப்புகள் - மனம் நிறை மகள், சுதாவின் சுந்தரி, மகளோசை, மகளதிகாரம். நண்பர்கள் - உறவினர்களுக்கு இந்த தலைப்புகளை poll வைத்து அவர்களின் விருப்பதைக் கேட்டு, முடிவு செய்தேன்.

உறவினர்கள், சில நண்பர்கள் என்று எங்கள் கூட இருந்தவர்கள்தான் இந்த புத்தகத்தை relate செய்து கொள்ள முடியும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பிறகு புரிந்தது எல்லா அம்மாவும் இந்த புத்தகத்தோடு relate செய்து கொள்ள முடியும். யார் படித்தாலும், அவர் தங்கள் குழந்தையின் மழலை நினைவுகளை மறுபடி நினைவு படுத்திக் கொள்ள முடியும். ஏனென்றால் எல்லா குழந்தைகளும்,  தாய்மை உணர்வும் ஒன்றுதான்.  

புத்தகம் படித்து, எனக்கு ஃபோனில் அதைப் பற்றி சிலாகித்து பேசிய அனைவரும் என்னை மகிழ்வித்தார்கள். சிலர் வாட்ஸாப் மெஸேஜ்' ஆக தன் கருத்தை அனுப்பியிருந்தார்கள். எல்லாமும் மிகவும் மகிழ்வாகவே இருந்தது. ஓரிரு எதிர்மறை கருத்தும் வந்திருந்ததுதான். 

புத்தகம் கைக்கு வந்த பிறகு, சில நிகழ்வுகள் எழுத மறந்தது நினைவுக்கு வந்துது. மகளும், உறவினர்களும் கூட சிலவற்றை நினைவு படுத்தினார்கள். இப்படி பல நிகழ்வுகள் விடுபட்டு விட்டது.  

எல்லோரும் என்னிடம் கேட்டது, "மகள் படித்து என்ன சொன்னாள்?" என்பதுதான். மகள் அந்தந்த content -ற்கு ஏற்ற மாதிரி ரசித்தாள், சிரித்தாள், அவளைப் பற்றி சிலவற்றை முதல்முறை தெரிந்து கொண்டதால்  ஆச்சர்யப்பட்டாள், "என்னை கிண்டல் செய்யறியா?" என்று என்மேல் விளையாட்டாக கோபித்தாள். இப்படி நவரசங்களையும் காண்பித்தாள். ஆனால் "என்னை எவ்வளவு திட்டியிருக்க... அதப்பத்தி ஒண்ணுமே எழுதலியே" என்றாள். "ம்க்கும். நீ என்னை பத்தி புத்தகம் எழுதும்போது, அதுல எழுதிக்கோ" என்றேன். வேற என்ன சொல்லி சமாளிக்கறது சொல்லுங்க?! 

Last, but not the least, என் முதல் தோழி & என் கசின் அனிதா ஒரு கவிதையாக தன் கருத்தை எழுதித் தந்தாள். ஒவ்வொரு வார்த்தையும் exaggeration தான். ஆனாலும் இது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.


தவப்புதல்வி! 

---------------------

தவமிருந்து நான் பெற்ற படைப்பு!

வாசித்தேன்! மெய் மறந்தேன்!!


(சுதா) உன் தாயன்பில் என் உள்ளம் கரைந்தேன்!

தமிழின் இனிமை! தாய் பாசத்தின் பெருமை!

கண்டேன்! வியந்தேன்!!


கருவாகி உருவாகி உயிராகி 

வளர்ந்த உறவு!


உன் கனவுகள் உயிர் பெற்ற கதை!

உன் உணர்வுகள் உருப் பெற்ற நிலை!


நீ தாயுணர்வின் சிற்பி!

தமிழ்த் தாயின் தவப்புதல்வி!


எண்ணங்களை இயல்பான எழுத்துக்களாய்த் தந்த வித்தகி!

தாயன்பின் எடுத்துக் காட்டு!

அம்மா என்ற வார்த்தையின் உண்மை அர்த்தம்!


தாய்மையை அணு அணுவாய் ரசித்த ரசிகை!

தாய்மையின் மதிப்பை மற்றவர்க்கு உணர்த்திய தாரகை!        

*****

கண்மணி மானு!

----------------------------

என்னே உன் நுண்ணறிவு!

'தாயைப் போல பிள்ளை

நூலைப் போல சேலை'


வளரும் விஞ்ஞானி, மலரும் மேதாவி!

பேசும் சித்திரம், புதையலில் புதையலில் கிடைத்த ரத்தினம்!


தாய் சேய் அன்பு உரையாடல்கள்

காலத்தினால் அழியாத கல்வெட்டுகள்!


'அப்பனுக்கு பாடம் சொன்னான் சுப்பன்'

கேள்விக்கு கணைகளால் தாயை திணரச் செய்த சேய்!


அன்பு, அறிவு, அழகு 

ஒன்றாய் சேர்ந்த இறைவி நீ!


வாழ்க உங்கள் அன்பு! 

வளர்க உங்கள் உறவு!!            


- அனிதா          

December 15, 2024